போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதோ ஒரு வகையில் உளவியல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை சுகதேகியாக்குவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று மன நலம் தொடர்பான நடை பவனி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு- கிழக்கு மக்களை உளநல ரீதியில் சுகதேகியாக்க தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை எனவும், எனவே விரைந்து பணியாற்றி இவ்வாறான உளநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை சமுதாய நிரோட்டத்தில் இணைப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உளநல ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் தெரிந்த நிபுணர்களை அழைத்து வருவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போரின் பின்னர் தமிழ் மக்கள் ஏதோ வகையில் உளம் சார்ந்த பிரச்சினைக்கு உள்ளாகின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் உடல் நோயை கவனித்து வரும் மக்கள் தங்கள் உளம் சார்ந்த பிரச்சினையை கவனிப்பதே இல்லை என்றும் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் மன்னார் நகர சபை தலைவர் அன்ரனி டேவிற்சன், குடும்ப நல பணியாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட செயலாக ஊழியர்கள், பொது மக்கள் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர்.