சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி, மட்டக்களப்பில் இன்று மூன்றாவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில், அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்று ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.