மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளை இராணுவ முகாம் அமைக்கவும், ஊர்காவல்படையினர் பயிர் செய்யவும் அரசாங்கம் வழங்கினால், எமது மக்கள் எங்கே செல்வது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ள அவர், மர முந்திரிகை செய்கைக்கு உரிய காணிகளை இராணுவத்தினர் வாகரை பிரதேச செயலாளரிடம் கோருகின்றனர் எனவும், அவர்களுக்கு 500ஏக்கர் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு முழுவதும் இராணுவ முகாம்களுக்கும், வேலைத்திட்டங்களுக்கும் காணிகளை ஒதுக்குவதாக இருந்தால், தமிழ் மக்கள் எதிர்காலத்தில் இந்த காணியை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் தான் ஏற்படும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவதை தம்மால் ஏற்க முடியாது எனவும், இராணுவத்தினருக்கு காணிகளை வழங்க முடியாது என்றும் அவை மக்களுக்கு தேவையாக உள்ளன எனவும் யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.