யாழ்.கோட்டையினுள் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியா என்பது குறித்த விபரங்கள் எவையும் தெரியவரவில்லை.
முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனிதபுதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதிலும், கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மன்னாரில் சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பணி பகுதியில் நடைபெற்று வரும் மனித எச்ச அகழ்வுப் பணி கடந்த இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் இன்று 34 ஆவது நாள்களாக நடைபெற்றது.
மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது வரைக்கும் 26 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக வெளியில் எடுக்கப்பட்ட நிலையில், 39 எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் அகழ்வுக்காக அடையாளமிடப்பட்ட நிலையிலேயே நேற்றைய அகழ்வுப் பணி இடம்பெற்றுள்ளது.