முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மருத்துவம் மனம் சார்ந்ததும் தான்

1795

மன உளைச்சலுடன் வாழும் நாம், என்ன நல்ல உணவும், சத்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டாலும் நிரந்தர நோயாளியாகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை.

மருத்துவம் மனம் சார்ந்ததும் தான்
மருத்துவம் என்பது வெறும் நோய், மருந்து சார்ந்தது மட்டுமல்ல. முக்கியமாக மனம் சார்ந்தது. அநேக உடல் நல பாதிப்புகளும் மன நல பாதிப்பின் காரணமாகவே ஏற்படுகின்றன. உடம்பு ஒன்று தான் காரணம் என்றால் விழுந்து விழுந்து உடம்பை கவனிப்பவர்கள் கூட நோய் வாய்ப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? பிழிய, பிழிய மன உளைச்சலுடன் வாழும் நாம், என்ன நல்ல உணவும், சத்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டாலும் நிரந்தர நோயாளியாகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை. மன உளைச்சல், சோர்வு, கவலை, மனநிம்மதி இவைகளால்தான் இன்று மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

மன நலன்:

* நல்ல உறவுகளை வளர்க்கும்.
* தரமான வாழ்வினைத் தரும்.
* உடல் நலத்தினை சீராய் வைக்கும்.
* வாழ்வின் இயற்கையான ஏற்ற தாழ்வுகளை சீராய் கையாள வைக்கும்.
* குடும்பம் இறுக்கமான சூழலில் இராது.
* குற்றங்கள் குறையும்.

உடையில் காட்டும் நாகரீகத்தினை மனிதன் வார்த்தைகளிலும், செயல்களிலும் காட்டுவதில்லை. லட்சம் லட்சமாய் உடல் நலத்திற்காக மருத்துவமனைகளில் செலவழிக்கும் மனிதன் தன் மன நலத்திற்காக நல்ல முயற்சிகள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. பொருளாதார வசதி பல சவுகர்யங்களை நமக்குத் தரலாம். ஆனால் இப்படித்தான் நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில சுய முயற்சிகள், சுய கட்டுப்பாடுகள் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. அவற்றினை சமுதாயத்திற்கு காட்டுவதும் மன ஆரோக்கியம் என்ற அடிப்படையின் கீழ் மருத்துவ உலகின் கடமையாகும்.

அதன்படி நான் படித்து அறிந்து கொண்ட சில குறிப்புகளை உங்கள் மனநலம் வேண்டி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

* உங்களை பற்றிய ஒரு பார்வையை உங்களுக்குள்ளே உருவாக்குங்கள். நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதனை மனதில் உறுதியாக நினையுங்கள். (உ.ம். நான் மருத்துவராக வேண்டும்). இந்த மாதிரியான உங்கள் உருவத்தினை உங்கள் எண்ணத்தில் எப்பொழுதும் வையுங்கள். உங்கள் மனம் அதனை நோக்கி செயல்பட ஆரம்பித்து விடும்.

* உங்களுக்குள் உண்மையாய் ஒரு பொய்யை சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றி இல்லாத ஒன்றை (உ.ம். நான் மிகவும் அழகாக, ஆரோக்கியமாக இருக்கின்றேன்). சொல்லிக் கொள்ளுங்கள். இந்த மன உருவக படம் நாளடைவில் நிஜமாகி விடும். உங்களை அறியாமலேயே உங்கள் மன உருவக படத்தினை நினைத்து உங்கள் உள் உணர்வு அதனை அடைய வேலை செய்து வெற்றி பெறும்.

* எப்பொழுதும் வசதியான வட்டத்திற்குள் அடங்கி விடாதீர்கள். நமக்கு 3 வேலை சாப்பாடு உள்ளது. எனக்கு இதுவே போதும். நான் இதனுள் அடங்கி விடுகிறேன் என்று வளரும் இளைய சமுதாயம் கூறக் கூடாது. அப்படி இருந்து விட்டால் தனி மனித முன்னேற்றமோ, சமுதாய முன்னேற்றமோ இருக்காது. சவால்களை சந்திக்க வேண்டும். திறமையாய் அதில் வெற்றி பெற வேண்டும். படிப்பு, வேலை இவையெல்லாம் வயதிற்கேற்ற சவால்கள் தான்.

* உங்கள் சாவி உங்கள் கையில். ஒழுக்கமில்லாத வாழ்க்கை எந்த பலனையும் தராது. இது அறிவுரை அல்ல. நிஜம். அந்த ஒழுக்கத்திற்கான சாவி உங்களிடம்தான் இருக்கின்றது.

* உங்கள் வேலைகளை முறைப்படுத்துங்கள். ஒரு மணி நேரம் திட்டம் செய்து செய்யப்படும் ஒருவேலை, 3 மணி நேர தடையில்லா செயல்பாட்டிற்கு உதவும்.

* உங்கள் இலக்கை முக்கியமானதாய் பெரிதாய் வையுங்கள். 10 விஷயங்களை ஒன்றாய் வைத்து எதுவுமே சக்தி இல்லாமல் ஆகி விடச் செய்யாதீர்கள். இலக்கினை முறையாய் ஒன்றாக வையுங்கள். அதற்கு சக்தி கூடும்.

* இதையெல்லாம் செய்ய முடியுமா என்று நினைக்காதீர்கள். இதுவரை நீங்கள் செய்யவில்லை. ஆக்கப்பூர்வமாய் நினையுங்கள். பொறுமையாய் செய்யுங்கள்.

* நீங்கள் எதுவாக நினைக்கின்றீர்களோ அதனை இப்பொழுதே உருவகித்துக் கொள்ளுங்கள்.

* அமைதியாய் எதுவும் செய்யாமல், தனியாய், நீண்ட நேரம் இருங்கள். அமைதியான தனிமை உங்கள் உண்மையான விருப்பத்தினை தெளிவாக்கும். உறுதியாக்கும். இன்றைய வாழ்க்கையில் நாம் பிறரது கனவுகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆக உங்கள் உள் மன எண்ணங்கள் உருவாகி செயலாக இந்த தனிமை. அமைதி வெகுவாய் உதவும்.

* இதை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இது உண்மை. உங்களுக்கு பிடித்த சந்தோஷமான பாட்டை உங்களுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி ஆகி விடுவீர்கள்.

* டி.வி.யில் பல்லி போல் சதா ஒட்டியிருக்கும் பழக்கத்தை இனியாவது விடுங்கள். இது இந்த கால அனைத்து வயதினருக்கும் அவசியமானது. டி.வி.யினை நீங்கள் பார்க்கும் பொழுது அவர்களது கனவுகளை அவர்கள் நனவாக்கி வாழ்வதினை பார்க்கின்றீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள் வலு விழந்து கொண்டிருக்கின்றன என்பதனை உணருங்கள்.

* தினமும் சிறிது நேரமாவது படியுங்கள். செய்தித் தாள்களாவது படியுங்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும் வாழ்க்கை உங்களை மிக திறமைசாலி ஆக்கி விடும்.

* திடீரென நீங்கள் இறப்பது போல் கற்பனை செய்யுங்கள். அந்நிலையில் நீங்கள் மிகவும் விரும்பியவர்கள் உங்கள் மனதிற்கு வருவார்கள். நீங்கள் செய்ய நினைத்த பல செயல்கள் மனதில் தோன்றும். தெளிவு பிறக்கும். நாம் அதிகம் விரும்பியவர்களிடம் அதனை வெளிப்படுத்த தவறி இருப்போம். இனி அவர்களுடன் சிறந்த வாழ்க்கை இருக்கும். நாம் செய்ய நினைக்கும் செயல்களில் உறுதியும், முனைப்பும் இருக்கும்.

* வேகமாய், தலை தெறிக்க, பரபரப்பாய் எதனையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். இது உங்கள் செயலாக்கத்தில் தொய்வினை ஏற்படுத்தும். நிதானமான செயல்பாடுகளே நிரந்தர வெற்றி தரும்.

* உங்களுக்குள் ஒரு திறமைசாலி ஒளிந்திருக்கின்றான். அவனை தேடி கண்டு பிடியுங்கள்.

* உங்கள் முயற்சிகள், வேலைகள் உங்களுக்கு இனிமை தருவதாக இருக்க வேண்டும். சோர்வும், டென்ஷனுமாக இருக்கக் கூடாது.

* எதையும் எதிர்பார்த்து தவிக்காதீர்கள், உங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

* எல்லோருமே சிறகுள்ள தேவதைகள்தான்.

* நாம் ஒரு இடம், மனம் எங்கோ ஒரு இடம் என்று இருக்கின்றோம். இதனால் நம்மால் எதிலும் முழு மனதாக ஈடுபடமுடியவில்லை. உங்கள் செயலில், உங்கள் தேவையில் முழு மனதோடு ஈடுபடுங்கள். வெற்றி கிட்டும்.

* உங்களுக்கு ஒரு ‘ஹீரோ’ ‘முன்மாதிரி’ தேவைதான். அவரைப் போல் நானும் செயல்பட வேண்டும் என்று உந்துதல் மனதில் வரும். ஆனால் அதனை கடை பிடிப்பது எப்படி? உங்கள் மனதிற்கு பிடித்தவரை தேர்ந்தெடுங்கள். அவரது புத்தகங்களை படியுங்கள். அப்பொழுதுதான் நாமும் இப்படி அயராது முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.

* பலர் உங்களை பார்த்து உங்களிடம் உறுதி இல்லை என்று சொல்லலாம். ஆனால் உங்களுக்கு நல்ல மன உறுதி இருக்கின்றது என நம்புங்கள். அதனை வலுவூட்டிக் கொண்டே இருங்கள்.

* உங்களுக்குள் ஒழுக்கம் இருந்தால், சுயகட்டுப்பாடு இருந்தால் உங்கள் மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். ஆக தேவையற்ற ஆசைகளுக்கு முடியாது என்று சொல்ல பழகி விடுங்கள்.

* இந்த நொடியில் வாழுங்கள். பழையவைகளை தூக்கி எறிந்து விடுங்கள். இந்த நொடி, இந்த நொடியில் முழுமையாய் வாழுங்கள்.

* நாம் நினைத்ததை அடையும் பொழுதே நாம் நன்றாக இருப்பதாக நாம் உணர்வோம். நாம் நன்றாக இருக்கும் பொழுதுதான் நினைத்ததை முறையாய் அடைய முடியும். ஆக நான் நன்றாக இருக்கின்றேன். ஆரோக்கியமாய் இருக்கின்றேன் என்று உங்களை நீங்கள் பழக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடன் நீங்களே மனதினுள் பேசிக் கொள்ளுங்கள். கேள்வி கேட்டு பதில் பெறுங்கள். இது உங்கள் பாதையினைத் தெளிவாக்கும். காலையில் எழுந்திருக்கும் பொழுது உங்கள் வலது புறம் திரும்பி எழுந்திருங்கள். கனவுகள், சக்தி, உருவாக்கம், உள் உணர்வு இவை அனைத்தும் வலது புற மூளையில் இருந்தே சேருகின்றன. உதாரணமாக ஒரு கனமான பையினை நீங்கள் தூக்கும் பொழுது இது ரொம்ப ‘போர்’ என இடது பக்க மூளை சொல்லும்.

இதுவே உங்கள் குழந்தையினை நீங்கள் தூக்கிச் சென்றால் அதற்குத் தேவையான சக்தியினை வலது பக்க மூளை கொடுத்து விடும். தேவை எனப்படும் பொழுது இவ்வாறு நிகழும். வலது பக்க மூளையின் சக்தி இருப்பதனை நாம் பழக வேண்டும்.

உங்கள் வேலையினை சரியாக முடியுங்கள். சோர்வு எங்கிருந்து வருகின்றது என்று தெரியுமா? கடின உழைப்பு, அதிக உழைப்பு, இவை நமக்கு சோர்வு தருவதில்லை. ஒரு வேலையை சரியாய், முறையாய் முடிக்கா விட்டாலே அதிக சோர்வு ஏற்படும். ஆக எந்த ஒரு வேலையினையும் முறையாய் முடித்து விடுங்கள்.

ஒவ்வொரு நாளும் உங்கள் சாதனை பொறிக்கும் நாளாகட்டும். இந்த உயர்வு உங்கள் உள்ளங்கையில் இருக்கின்றது. பிரச்சினையா…. உன்னை காலால் மிதித்து ஓடச் செய்வேன் என்ற உறுதியினை கட்டாயம் இன்றைய கால சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் ஏற்றே ஆக வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *