மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பொது சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகளை அகற்றி, தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து விரைவாக தேர்தல்களை நடத்துவதற்கு ஒழங்குகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதுள்ள சட்டத்தின் படி, பழைய விகிதாசார முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தச் சட்டத்தில் அவசர திருத்தங்களை செய்து, விரைவாக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் கலப்பு முறையில் இடம்பெறலாம் என்றும், பெண் வேட்பாளர்களுக்கு 25 வீத ஒதுக்கீடு தொடரலாம் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு 3 மாதங்கள் தேவைப்படும் என்றும், வாக்குச்சீட்டு முறையில் மாற்றங்களை செய்வதற்கு, காலஅவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜூலை மாதமளவில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.