காவல்த்துறையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று காலை கிளிநொச்சியிலும் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன், காவல்த்துறை அராஜகம் ஒழிய வேண்டும் எனவும், நீதி வேண்டும் என்றும் முழக்கமிட்டவாறு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்துள்ளனர்.
இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களும் இன்று காலை 10.00மணி முதல் 12.00மணிவரை வளாகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கொலையை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான காவல்த்துறையின் சட்டத்திற்கு முரணான முயற்சியை, தேசிய காவல்த்துறை ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமை ஆணைக்குழு, உள்ளுர் – அனைத்துலக மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும் எனறும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.