தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான தயார் படுத்தல்களில் புலம் பெயர் தேசங்கள் மாத்திரமன்றி தமிழர் தாயகப் பிரதேசங்களும் தயாராகி வருகின்றன.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மாவீரர் நாளை, இந்த முறை பகிரங்கமாக நினைவுகூருவதற்கு பல அமைப்புகளாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர் நிறைவடைந்த பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் மாவீரர் நாள் புலம்பெயர் நாடுகளில் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தமிழர் தாயகத்தில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ள நிலைமையே காணப்படுகிறது.
அதனால் தமிழர் தாயகப் பகுதிகளில் புலனாய்வாளர்களின் நடமாட்டத்திற்கு மத்தியில் ஆங்காங்கே இரகசியமான முறையிலேயே மக்கள் மாவீரர்களுக்கான தங்களின் நினைவேந்தல்களை கடைப்பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் உரிமைகளுக்காக போராடி உயர்நீத்தவர்களை எவ்வித தடையும் இன்றி நினைவுகூர, நல்லிணக்க சமிக்ஞைகளை காட்டிவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் வழியேற்படுத்தித் தரவேண்டுமென தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் அரசாங்கம் அதற்கு எந்த விதமான சாதமான பதிலையும் வழங்காத போதிலும், மரணித்த தங்களின் வீரர்களை நினைவுகூர்வதற்கு தமிழினம் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.