முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை பிரஜைகளை பாதுகாக்கவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள், அந்த சமூகத்தினரிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு அதிகாரிகள் துரிதமாக முடிவை காணவேண்டியது அவசியம்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புகளின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்மூடித்தனமாக கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
குறிப்பாக அதில் பெரும்பாலானவர்கள் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதியளித்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கையின் போது குரானை வைத்திருந்தமைக்காகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே நீண்ட கால அளவில் மனித உரிமை துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவது அவசியம்.
பல இலங்கையர்கள் அனுபவித்த இன வன்முறையும் மனித உரிமை மீறல்களும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படுகின்றன” என மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.