பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் உடைத்தெறியப்பட வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பௌத்த பேரினவாதத்தால் முஸ்லிம் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளைப் போன்று சித்தரிக்கப்படுகின்றனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், முழு பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும். அதற்கு பின்னால் அரசு உள்ளது.
இந்த நிகழ்ச்சி நிரல் உடைத்தெறியப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும்.
பௌத்தம் அரச மதம் என்ற கோட்பாடு உடைக்கப்படுமாக இருந்தால்தான் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாத்திரமன்றி சிங்கள கிறிஸ்தவர்களுக்குமே பாதுகாப்பு கிடைக்கும் ” என மேலும் தெரிவித்துள்ளார்.