யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் முல்லேரியா ஆய்வு கூடம் ஆகியவற்றில், 920 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், வடக்கிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
இவர்களில் 7 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர் என்றும், ஏனைய இருவரும், கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தப் பரிசோதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம் குமாரசாமி வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.