வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த வீதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களின் கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்கப்படாத நிலையில், இன்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக வீதியை மறுத்துப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து, மாம்பழம் சந்தி, கச்சேரி – நல்லூர் வீதி வழியாக வாகனங்கள், மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.