யாழ்ப்பாண மாவட்டத்தில், 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 42 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்படுவதால், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், மற்றும் பல்கலைக்கழக அனுமதி என்பனவற்றில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து எழுந்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியலில், இருந்து, 42 ஆயிரத்து 234 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் வடக்கில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள், இம்முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாலேயே, இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதிலிருந்தே, 42 ஆயிரத்து 234 பேரின் பெயர்கள், நீக்கப்படும் நிலையில், புதிதாக 33 ஆயிரத்து 211 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 7 ஆயிரம் பேரால் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
எனினும், தற்போது முதல்முறையாக 9 ஆயிரம் பேரால் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது, நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை மற்றும் பல்கலைக்கழக அனுமதி என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.