யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால், வெங்காயம் மற்றும், புகையிலை செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதுடன், வலிகாமம் பகுதியில் தினமும், மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.
வெங்காயம் மற்றும் புகையிலை போன்றவை அறுவடை செய்யப்படும் நேரத்தில் பெய்து வரும் இந்த மழையினால், விவசாயிகள் பலத்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கம் வரை நீடித்த மாரி மழையினால் வெங்காயச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
தாமதமாக, வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகள் தற்போது அவற்றை அறுவடை செய்து வருகின்றனர்.
அத்துடன், புகையிலையும் அறுவடை செய்யப்பட்டு வருவதுடன் பெருமளவு தோட்டங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது.
வெங்காயம் மற்றும் புகையிலை என்பனவற்றை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் புகையிலையை உலர்த்த முடியாமலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.