சிறிலங்காவின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ (International Women of Courage) விருதுப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார்.
உலகெங்கிலும் பெண்களின் அமைதி, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வலுவூட்டல் போன்றவற்றுக்காக போராட்டத்தில் தனித்துவமாக அபாயத்தையும் பொருட்படுத்தாமல் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகின்றது.
ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.