போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சிறிலங்காவின் அலட்சிய செயற்பாடுகள் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடுமையான அவதானத்தைப் பெற்றுள்ள தாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிரிவு பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் மற்றுமொரு உள்ள விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அர்ப்பணிப்பற்ற கண்துடைப்பு நடவடிக்கையால் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஏமாந்துவிடாமல் உடனடியாக சர்வதேச நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஆகக்குறைந்த பட்சம் 12 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் மீனாட்சி கங்குலி மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தத்தை தணிக்கும் வகையிலேயே இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை. காணாமல்போன உறவினரை தேடுவதற்கு அவர்தம் உறவினருக்கு உதவவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.