காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜெருசலேம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து, நேற்று இரவு காஸாவில், இஸ்ரேலிய வான்படையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமையகம் இயங்கி வந்த, காஸா டவர் என்று அழைக்கப்படும் 13 மாடி கட்டடம் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதால்,, பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸா டவர் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவ் மீது 150 ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் ஏவுகணை தடுப்பு அமைப்பினால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
எனினும். சில ஏவுகணைடுகள் ரெல் அவிவ் மற்றும் பிற இஸ்ரேலிய நகங்களில் விழுந்து வெடித்து, பேருந்து, வாகனங்கள், கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஒரு இந்திய பணியாளர் உள்ளிட்ட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்களால் காஸா மற்றும் இஸ்ரேலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.