வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக தற்போது பதிலளிக்க முடியாது எனவும், காலம் பதில் சொல்லும் என்றும் மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீதான குழு நிலை விவாதம் நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர்கின்றார்கள் எனவும், எனவே வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதற்கான விண்ணபத்தை புலம்பெயர் தமிழர்களிடம் முன்வைக்குமாறும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
புலம்பெயர் தமிழர்களுக்கு 500 கோடி என்பது பெரிய பணம் அல்ல எனவும், அவர்களிடம் பணத்தை பெற்று தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை அமைக்குமாறும், அதில் இலங்கையின் ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் கல்வி கற்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவ படிப்பை தொடருவதற்காக அதிகளவு பணத்தை செலவிடுகின்றார்கள் என்று கூறியுள்ளார்.
எனினும் தனியார் மருத்துவ கல்லூரியை வடக்கில் அமைப்பது தொடர்பாக தற்போது கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்றும், அதற்கு காலம் பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.