வடக்கில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேற அனுமதிக்க மாட்டேன் என காவற்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், காவற்துறையினர் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் காவற்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் யாழ் தலைமை காவல் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் அமைதி இல்லை, சமாதானம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீராகஇல்லை என வெளி உலகிற்கு காட்டுவதை இலக்காக கொண்டு சில சிறிய குழுக்கள் இயங்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றது.
அதனை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்தினர் கடற்படையினர் வான்படையினர் மற்றும் விசேட அதிரப்படையினரையும் இணைத்து செயற்படுவோம்.
சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை தாம் இவ்விடயத்தில் எதிர் பார்கின்றோம். குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த தாம் அறிந்த தகவல்களை காவற்துறையினருக்கு வழங்க பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு குழுவினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாதம் முளைக்கின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் சமூகத்தில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களது மனப்பாங்கு இன்னமும் மாறவில்லை. அதனால், நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. என கூறமுடியாது. பயங்கரவாதம் தற்போது விதைகளில் இருந்து முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது.
இவ்வாறு தான் ஆரம்ப காலத்தில் ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. என தெரிவித்தார்.