வவுனியாவில் போர் முடிவடைந்த 2009ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் நடப்பாண்டின் இன்று வரையான காலப்பகுதியில் 1775.93 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் வசம் இருப்பதாக வவுனியா மாவட்டசெயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்களின் படி போர் முடிவடைந்த 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காணிகளாக 10,788.3 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமாக 135 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 10,923.67 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசம் இருந்துள்ளது.
பின்னர் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் நாள் வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் 1,781.93 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 1,713.8 ஏக்கர் அரசகாணியும், 61.7 தனியார் காணியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாளுக்கு பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 7,369.81 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கபட்டுள்ளதுடன், மீதமாக உள்ள 1775.93 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவற்றில் அரசுக்கு சொந்தமாக 1713.8 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமாக 62.13 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.