மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“மாங்கேணி கிராம அலுவலர் பிரிவில் காரமுனை என்ற பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் குடியேற்றுவதற்கான செயற்திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் சிங்கள மக்கள் குடியிருந்து 1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர்.
அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் இங்கு இருக்கவில்லை என்பதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன.
இந்த 178 குடும்பங்களும் 1985 இல் வெளியேறியிருந்தால் அவர்கள், 1981ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் அவர்களின் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்.
178 குடும்பங்கள் இருந்திருந்தால் பௌத்த விகாரை இருந்திருக்கும், பாடசாலை போன்ற பல கட்டிடங்கள் இருந்திருக்கும்.
எனவே சரியான முறையில் ஆவணங்கள் காட்டப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.