ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், பங்கேற்காது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு, மீது, கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த தீர்மானத்தை தோற்கடிக்க உதவுமாறு, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என்றும், எதிர்த்து வாக்களிக்கும் என்றும் சிறிலங்கா அமைச்சர்கள், தினேஸ் குணவர்த்தன, சரத் வீரசேகர போன்றோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அன்றைய அமர்வில் இந்தியா பெரும்பாலும் பங்கேற்காது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.