போராட்ட களத்திற்கு வருகை தந்து வாக்குறுதிகள் வழங்குவதை விட, அதனைச் செயலில் காண்பிக்குமாறு கூறியுள்ள கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அங்கு சென்ற இலங்கை அரசின் பிரதி அமைச்சரான அங்கஜன் இராமநாதனை திருப்பியனுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவு கோப்பாப்புலவு பிரதேசத்தில் சிறிலங்கா படையினரால் அபகரிக்கப்பட்ட தமது பாரம்பரிய காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 500 நாட்களிற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் போராட்டத்தினை மேலும் விரிவாக்க முற்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம், இன்று 518 ஆவது நாளாக கோப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினால், சிறிலஙகா இராணுவம் அபகரித்து வைத்துள்ள காணிகளில் சில பகுதிகளை பொதுமக்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.
இதன்போதே வாக்குறுதிகள் வழங்குவதை விடவும் அதனைச் செயலில் காண்பிக்குமாறு கூறி, இலங்கை அரசின் பிரதி அமைச்சரான அங்கஜன் இராமநாதனை திருப்பியனுப்பியுள்ள மக்கள், புதிதாக மற்றொரு பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காதர் மஸ்தானிடமும் இதே கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.