“எழுக தமிழ்” மக்கள் பேரணியானது தமிழீழ விடுதலைப்போராட்டம் ஒடுக்கபட்ட பின்னர் தமிழ் மக்கள் தாமாக கட்சிகளைக் கடந்து மிகப்பிரமாண்டமாக ஒன்றிணைந்த தமது எழுச்சியை சிங்கள அரசாங்கத்திற்கும் வெளி உலகத்திற்கும் மிகப் பிரமாண்மாக எடுத்து காட்டியுள்ளனர் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலும் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலும் ஒன்று கூடிய மக்கள் அனைவரும் ஒற்றுயைமாக தமது கோரிக்கையினை முன்வைத்துள்ளதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரினதும் அவரது தமிழரசுக்கட்சினரின் எதிர்பையும் மீறி, தாமாக மக்கள் தமது ஒன்றிணைவைச் செய்து காட்டியுள்ளதாகவும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள், பலகலைக் கழகம் ஆகியனவை தமது பூரண ஒத்துளைப்பினை வளங்கியதோடு, யாழ் நகரமே கடைகள் அனைத்தையும் அடைத்து பேரணிக்கான தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
எமது இனத்தின் விடுதலை வேண்டிய பயணத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாக இது நிச்சயம் இருக்கும் எனவும், சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கும், இணக்க அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளுக்கும் இப்பேரணியின் பாரிய வெற்றியானது நிச்சயம் பேரிடியாகவே அமைந்திருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அத்துடன் வெளிநாடுகளும் தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தினைப் புரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்தினையும் இது ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், புலம் பெயந்த மக்களின் பேராதரவும் இப்பேரணியின் வெற்றிக்கு நிச்சயமாக காரணமாக இருந்துள்ளது என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு விபரித்துள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும் இப்பேரணிக்கு தமது ஆதரவினை நல்கியிருந்ததுடன், ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் உதவியுடன் பேரணியில் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக தண்ணீர்ப் போத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இப்பேரணிக்கு தமது ஆதரவினையும், பங்களிப்பினை நல்கிய அனைத்து அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் தமது மனமான்ற நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.