சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி, லண்டனில் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள உணவுதவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் பேரணியை நடத்துவதற்கு, 09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வில்சன் கமலராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுபோ, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் மற்றும் தர்சன் கல்முனை பிரதீபன், திருக்கோவில் செல்வராணி ஆகிய 9 பேருக்கே, இந்த தடையுத்தரவு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 9 பேரும், மக்களை ஒன்றுதிரட்டி, உண்ணாவிரதம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு, நேற்று தொடக்கம் எதிர்வரும் 07ஆம் நாள் வரை பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.