வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்லும் அனைவரும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து சிறிலங்காவுக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தலுக்கான நாட்கள் 28 இல் இருந்து 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.