மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று 27 இன் கீழ் இரண்டாம் நிலையியற் கட்டளையின் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த, பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்களே இவ்வாறு உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளார்கள். கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்டதாலேயே இந்த வன்முறைச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதன் பின்னணியின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஹர சிறைச்சாலையில் 80சதவீதத்திற்கும் அதிகமானோர் விளக்கமறியல் கைதிகள் என்றுக் கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கையில், அந்தச் சிறைச்சாலையில் 70 சதவீதமானோருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்றே தெரிகிறது.
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவும் இந்தத் தருணத்தில், 11 மாதங்களுக்கு மேலாக வழக்குகளும் விசாரிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.