இல்ஙகை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65 ஆண்டு கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு என்பது அந்த நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், அனைவரும் சொந்தம் கொண்டாடக் கூடியதுமான ஒரு அரசியலமைப்பாக இருகவேண்டும் என்ற வகையில், இலங்கையில் தமிழ் மக்களை காரணம் காட்டியே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த அரசியலமைப்பில் 65 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு, பல தியாகங்களை செய்து, பேரிழப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய அரசியலமைப்பு இரகசியமாக தயாரிக்கப்படுகின்றது என்பதையும் சுடடிக்காட்டியுள்ள அவர், உண்மையிலேயே இந்த மக்களுடைய அபிலாஷைகள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை இருந்தால் ஏன் இந்த ரகசியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில், ‘எழுக தமிழ்’ பேரணி தமிழ் தேசத்தினுடைய எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாக மிளிரும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.