ஸ்காபரோ மத்திய பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ள கத்திக் குத்துச் சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Scarborough Town Centre பகுதியில் நேற்று முன்தினம் இரவும் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், நேற்று இரவு எட்டு மணியளவில் மீண்டு்ம் ஒரு கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Town Centre Court மற்றும் Borough Drive பகுதியில் அமைந்துள்ள YMCA நிலையத்திற்கு அருகே, இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பி்னை அடுத்து இந்த கத்திக் குத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கைகலப்பின் இடையே 17 வயது சிறுவன் ஒருவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 15 வயதுச் சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு அருகாமையிலேயே நேற்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதனால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கின்றதா என்பதனை தற்போதைக்கு கூறமுடியாதுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.