பல்வேறு தேவைகளுடன் காணப்படும் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தமது நிலைப்பாடாகும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான குறைநிவர்த்தி நடமாடும் சேவை இன்று சனிக்கிழம காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தினி சிறிஸ்கந்தராசா, சிறிதரன், மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனா என்றும், ஆனால் அந்த தேவைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் விபரித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மக்கள் தமது விருப்பங்கள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும், குறித்த நிகழ்வு தொடர்பில் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்துபவர்கள் கடந்த காலங்களில் மக்கள் தமது விருப்பங்களை வெளிப்படுத்துவற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பதையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காடடியுள்ளார்.