விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைப்பதற்கு தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது என்றும், அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளுனேயே தாங்கள் முன்னெடுத்து வந்ததாகவும், இன்று தமது அந்த பலம் மௌனிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் தேசிய இனங்கள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் தென்னிலங்கை ஆட்சி பீடத்தை அமைக்க முடியும் என கருதி வந்த நிலையில், கடந்த சனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளால் குறித்த நிலைப்பாடு தகர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் வழங்கிய வாக்குகளை விட தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வழங்கிய வாக்குகளால் இன்று புதிய சனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார் என்றும், இதன் மூலம் சிறுபான்மை இனத்தினுடைய பலத்தினை தென்னிலங்கை புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்சவினால் தேசிய இனங்கள் நசுக்கப்பட்டன என்றும், அப்போது பலமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை பிரித்தது போன்று, இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்க கூடாது என்பதற்காக சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இத்தகைய ஒரு சூழலிலேயே இன்று பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.