தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தற்போதய இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் சரணாகதி அரசியல் செய்யவில்லை எனவும், தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே இணக்க அரசியல் செய்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்திய காரியாலயம் முல்லைத்தீவு விசுவமடுவில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் எனவும், அந்த சந்தர்ப்பங்கள தான் எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே சந்தர்ப்பம் இன்றைக்கும் கொடுக்கப்படாத பட்சத்திலே, எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பம் தமக்கு வழங்கப்படாத காரணத்தினால் தம்மால் ஒன்றும் செய்யமுடியாது போய்விட்டதாக அரசாங்கத்தினால் நியாம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுவிடும் எனவும் அவர் விபரித்துள்ளார்.
அவ்வாறான நியாப்படுத்தல்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்க கூடாது என்பதற்காகவே சந்தர்ப்பம் வழங்கியிருப்பதாகவும், அதனை விடுத்து எங்களுடைய மக்களுக்கு ஒருபோதும் துரோகத்தனம் செய்யவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுப்பார்.
எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்கின்ற வகையில், அவர்கள் இலங்கையில் சுதந்திரமாக நாட்டில் சுவாசக்காற்றை உணரவேண்டும் என்ற ரீதியில் தமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் அவர் தனது உரையின் போது உறுதியளித்துள்ளார்.
நினைந்திருந்தால் கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் இனத்தை விலைபேசி வசதியாக வாழ்ந்திருக்கலாம் என்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த நிலைக்கு என்றைக்கும் செல்லாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.