இந்தியா-சீனா இடையேயான உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் மறுசீரமைப்பு தேவை என்றும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் விவகாரத்தால் இந்தியா பல்வேறு நாடுகளை எச்சரித்து வருகிறது என்றும், இதனால் அந்த நாடுகளுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பதான்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை ஐக்கிய நாடுகள் மன்றம் தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா மறுத்திருந்த விடயத்தில் இந்த நெருக்கடியை பார்க்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சீனா இடையில் போதுமான அளவில் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலையில் இரண்டு நாடுகளிடையேயான உறவில் மறுசீரமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சிவசங்கர் மேனன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை பல்வேறு தரப்பினரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.