மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, இலங்கையின் சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவவகார அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பின்போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்திலேயே தொடர்ந்து இருப்பதனை தவிர்த்து, தற்போதைய சூழ்நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிறுபான்மையினரின் மதம் சார்ந்த விடயங்கள் மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் ரீட்டா இஷாக் நாடியாவிடம் தெரிவித்துள்ளார்..
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பதிய ஆணைக்குழுக்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளதோடு, இதனூடாக நாட்டின் ஏனைய பிரசைகளின் உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.