நியூ ஃபவுண்ட்லான்ட் மாநிலத்தில் இருந்து முதன்முதலாக நீதிபதி ஒருவர் கனேடிய உச்சநீதிமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் புதிய முறையிலான நீதிபதிகள் நியமன முறையின் பிரகாரம், நியூ ஃபவுண்ட்லான்டிலேயே பிறந்து வளர்ந்தவரான நீதிபதி மல்க்கம் றோவ் தற்போது உச்சநீதின்றின் எட்டு நீதிபதிகளில் ஒருவராக நியமனம் பெற்றுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன நடைமுறை தொடர்பில சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், அவற்றினைத் தீர்க்கும் வகையில் பிரதமர் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்திய சுயாதீன குழு மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளார்.
1953ஆம் ஆண்டில் நியூ ஃபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் பிறந்த இவர், தனியார் அரசாங்க சட்ட மற்றும் நீதித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி சிறந்த அனுபவத்தினை பெற்றுள்ளவர் என்பதுடன், அரசியலமைப்பு விவகாரங்கள், வெளிநாட்டு உறவுகள், கடல் எல்லைசார் விடயங்கள், ஐக்கிய நாடுகள் ஊடான சட்ட ஆக்க பேச்சுக்கள் என்பவற்றிலும் இவர் பரந்த அறிவினைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
அத்துடன் தற்போதய லிபரல் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, உச்ச நீதிமன்ற நீதிபதிளுக்கு இருக்கவேண்டிய தகுதியான இரண்டு மொழித் தேர்ச்சி என்ற விடயத்திலும் இவர் திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசியலமைப்பு, குற்றவியல், குடிசார் சட்ட விவகாரங்களில் மிகவும் ஆழமான தேர்ச்சி உடைய நீதிபதி மல்க்கம் றோவை உச்சநீதிமன்றிக்கு நியமிப்பதனையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சி கொள்வதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் தெரிவித்துள்ளார்.