வட மாகாண முதலமைச்சரை சில தவறானவர்களும் இணைந்தே கனடாவுக்கு அழைப்பதாகவும், அதனால் அங்கு செல்ல வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்க்கம் நகரில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கனடாவுக்கு பயணிக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்கமைப்புகளையும் நேரடியாக மேற்கொள்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்ட கட்சிகளின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சியினரையோ அல்லது ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களையோ இணைத்துக்கொள்ளாது, பிற கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் வட மாகாண முதல்வர் பங்கு கொண்டால், அது கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் செயலிற்கு வழியிட்டுச் செல்லக்கூடும் என்பதனால், குறித்த நிகழ்விற்காக செல்வதனை தவிர்க்குமாறே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி முதலமைச்சரின் பயணம் இடல்பெறும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் நாள் லண்டனிற்குச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு மேற்கொண்ட ஓர் இரட்டை நகர ஒப்பந்தம் மூலம் லண்டனின் நகரம் ஒன்றினையும் யாழ். குடாநாட்டினையும் இணைத்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்த இணைப்பின் மூலம் வட மாகாணத்திற்கென எந்தவிதமான பயனுள்ள ஓர் விடயமும் கிடையாது எனவும், யூன் மாதம் எழுதப்பட்ட ஒப்பந்தமே பின்னர் போலியாக ஒப்பமிடப்பட்டதாகவும், ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.
அதேபோன்றே தற்போது மார்க்கம் நகரையும் முல்லைத்தீவினையும் இணைக்கும் திட்டமும் அமையும் என்று முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.