தான் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்ட நிலையில், அவற்றை தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தாம் இணங்கியுள்ளதனாலேயே ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளதாக சில அச்சு ஊடகங்கள் முதற்பக்க செய்தியாக வெளியிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஊடகத்துறை இந்தளவு ஒழுக்கமற்று செயற்படுவதை முன்னிட்டு மிகவும் வேதனையடைவதாகவும், செய்திகளை வழங்கும்போது சமூகத்திற்கு உண்மையை உரைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்துள்ள நிலையில், நாட்டை விற்கப் போகின்றோம் என்று சிலர் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களிலும் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இவற்றில் வெளிநாட்டவர்களே அதிகமாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதில் எங்காவது நாட்டை விற்பனை செய்துள்ளார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று பலர் குறிப்பிடுவதைப் போன்று சமஷ்டியை ஏற்படுத்தவோ நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவாக கூறிக்கொள்வதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.