கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பவற்றை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது எனவும், இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மக்களின் ஒன்றித்த குரலாக இந்தப்பேரணி அமைய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் எனவும் அது தெரிவித்துள்ளது.
நல்லிணக்க செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் மக்களுக்கான தீர்வு சமஷ்டி முறையில் இருக்கப் போவதில்லை என்பதுடன், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணையில் அனைத்துலக நாடுகளின் பங்களிப்புக்கு இடமில்லை என்பதையும், வடக்குக் கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பேயில்லை என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில், ஒன்றித்த குரலாக, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்துக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லவேண்டிய தார்மீகக் கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு என்பதையும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அடக்கப்பட்டு, ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி, இன அழிப்பைச் சநதித்த சமூகமொன்று, அனைத்துலக ஒழுங்கு முறைக்கு அமைவாக தனக்கான விடுதலை குறித்து வெளியுலகுக்கு அதியுச்ச அளவில் அழுத்திச் சொல்லவேண்டிய தேவை உள்ளதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலைஷைகளை வெளிக்கொணரும் முகமாக முன்னெடுக்கப்படும் இந்தப் பேரணியில், வடக்கு கிழக்கிலுள்ள அனைவரும் பங்குபற்றி ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்று கோரி நிற்பதோடு தனது பூரண பங்களிப்பையும் வழங்கி நிற்பதாகவும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.