நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால், சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் நாள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த தனது கணவர் உட்பட சிலர் குறித்து இன்னமும் எந்தவித தகவலும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிகூடிய கவனத்தை செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டாவது, காணாமல் போன தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் தேவை உறவினர்களுக்கு இருப்பதாகவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.