இலங்கையின் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதில் தடங்கல் காணப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து இயங்கிய போதிலும், தற்போது அதற்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமுகமாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும், எனவே இந்த தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு கடந்த 26 ஆம் நாள் நடைபெற்ற போதிலும் எந்தவொரு கலந்துரையாடலும் இல்லாமல் அந்த சந்திப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமது முடிவை அறிவிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் கோரியதை அடுத்தே, வழி நடத்தல் குழுவின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.