யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் வவுனியா வளாகம் எதிர்வரும் மார்ச் மாதம் வன்னிப் பல்கலைக்கழகமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக வவுனியா வளாகம் இயங்கி வந்த நிலையில் வன்னிப் பிரதேச கல்வியியலாளாகள் மற்றும் சமூகநலன் விரும்பிகளின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றில் நான் இதற்கான தெரிவை முன்வைத்தேன். அதனையடுத்து இது தொடர்பான நியாயப்பாடுகளை கருத்திற்கொண்டு உயர்கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏற்கனவே இதற்காக 100 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அனைத்து பீடங்களையும் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சு எனது வேண்டுகோளை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் இதனை அறிவிக்கவுள்ளது. தற்போது 25ஆயிரமாக உள்ள பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வன்னிப்பிரதேசங்களை சேர்ந்த பல மாணவர்கள் பயன்பெற இது பெரும் உதவியாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.