வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸை ஜெனிவாவில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரஸை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர், மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராக பணியாற்றிய போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், 1978ம் ஆண்டில் இருந்து தாம் பலமுறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதாகவும், தமது இதயத்தில் இடம்பிடித்த நாடு இலங்கை என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் தெரிவித்துள்ளார்.