மார்க்கம் – தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியிலுள்ள மிலிக்கன் மில்ஸ் சனசமூக நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமானது.
மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3 ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் போதாமலிருந்தும் வேட்பாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு தம்மை இத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தியிருந்தனர்.
எப்படியாயினும் இத்தேர்தல் ஒன்ராறியோ மகாணத்தில் மட்டுமல்ல நாடு தழுவிய ரீதியில் மிகுந்த அவதானத்தை ஈர்த்த ஒன்று. இத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படப் போகிறது என்பத அறிந்தவுடன் மார்க்கம் கல்விச் சபை உறுப்பினராகப் பணிபுரிந்துவரும் தமிழ்ப் பெண்ணான யுவனித்தா நாதன் அவர்கள் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட முன் வந்திருந்தார். ஆனாலும் நீண்டகால லிபரல் கட்சி உறுப்பினரும், கடந்த பல தேர்தல்களில் உதவிகளைப் புரிந்த அவரை லிபரல் கட்சி நியாயமற்ற முறையில் ஓரம் கட்டிவிட்டு தாம் விரும்பிய ஒருவரை முன்னிறுத்தியிருந்தது. கட்சியின் இந்த அராஜக நடைமுறை பற்றி பல பெரும் சமூக ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன. பெரும்பாலான தமிழர்கள், குறிப்பாக லிபரல் கட்சி ஆதரவாளர்கள் இது குறித்து விசனமடைந்திருந்தனர். இக் காரணத்தால் கன்சர்வேட்டிவ் கட்சியின் இன் நியமனத்தேர்தலும் களைகட்டியிருந்தது.
இத் தேர்தலின் போது சகல வேட்பாளர்களும் தமது தேர்தல் பணிகளை ஒழுங்காகவும் கண்ணியமாகவும் மேற்கொண்டு வாக்காளர்களுக்கோ அதிகாரிகளுக்கோ சிரமங்கள் கொடுக்காது தேர்தல் நிறைவுபெற உதவி புரிந்தனர்.
ராகவனின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் பலரும் உவகை கொண்டது கவனத்தி ஈர்த்தது.