தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது இனம், கலாச்சாரம், பண்பாடு என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம், தமிழர்களாகிய எமது இருப்பு இல்ஙகைத் தீவில் அழிக்கப்பட்டுவருவதையும் மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையினில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்க்கும் வகையில், வடக்கு கிழக்கிலுள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் செயற்படவேண்டுமெனவும், இதனை கருத்தில் கொண்டு தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்களின் பேரில் போலியான அறிக்கையொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து, தனது கட்சி ஊடகம் ஒன்றின் மூலம் செய்தியினை வெளியிட்டிருந்ததுடன், இதன் மூலம் பல்கலைக்கழக சமூகம் கூட்டமைப்பு பக்கமென்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மேற்கொள்ளவும் முடிந்திருந்தது.
அதேபோன்று இம்முறையும் மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கையொன்றை வெளியிட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஒருசிலருடன் கூட்டமைப்பு தலைமை நேற்று பேச்சுநடத்தியுள்ள போதிலும், மாணவ தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரியவருகின்றது.