தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையநாள் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர் எனவும், அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே எனவும், அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம் என்றும், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன என்றும் அவர் விபரித்துள்ளார்.
தமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது எனவும், தாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் என்பதே எனவும், தேர்தல் பரப்புரைகளின் போதும் அதற்கு எதிராகவே பேசியதாகவும், தாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு, நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க, ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதே தற்போதைய யதார்த்தம் எனவும், கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்துள்ளது என்றும், கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில், தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் தம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம் என்றும், அவர்களை இணைக்க தாம் என்றுமே தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன்வரவேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.





