தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று பகல் நடைபெற்றதுடன், இந்தக் கூட்டத்தில் குறித்த இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த நிலையிலேயே, இரகசிய வாக்கெடுப்பு கோருவதை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
யாருடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் எனவும், தாங்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு இணங்கப் போவதில்லை எனவும், மற்றையவர்களும் இரகசிய வாக்கெடுப்பு கோரக் கூடாது என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வாக்குகளால் வந்த முதலாவது கூட்டத்திலேயே, மக்களுக்குத் தெரியாமல் ஒழித்து பேரம்பேசி வாங்கி விற்று அரசியல் நடத்துவது மிக மிகக் கேவலமான விடயம் எனவும், யார் யாருடன் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசி, வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்காக நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கோ அதன் தலைவர்களுக்கோ வெளிப்படுத்தப்படாத தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுக்களை நடாத்தி வருகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.