இலங்கை அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த அநீதிகளை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்று வடமாகாண சபையின் ஆளும் கட்சியின் புதிய உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய வடமாகாணசபை அமர்வின்போது புதிதாக பதவியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான குகதாஸ் தனது முதல் உரையை ஆற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தான் போரின் இறுதிவரை போருக்குள் வாழ்ந்தவன் எனவும், அந்தகாலத்தில் சிறிலங்கா இராணுவம் மக்கள் மீதும், காயமடைந்தவர்கள் தங்கியிருந்த வைத்தியசாலைகள் மீதும் மிகமோசமான விமான குண்டு வீச்சு தாக்குதல்களையும், எறிகணை தாக்குதல்களையும் நடாத்தி, அப்பாவி மக்களையும், சிறுவர்களையும் படுகொலை செய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயங்கள் என்று சில பகுதிகளை அடையாளப்படுத்திய சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் தஞ்சம் புகுந்த நிலையில், அவற்றின் மீதும் மோசமான விமான குண்டு வீச்சுக்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடாத்தியதில், பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், பச்சிளம் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் தீவரமடைய முன்னதாக சுமார் 5 இலட்சம் மக்கள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து போர் வலயத்திற்குள் சிக்கிய போதிலும், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் வரையிலானவர்களே போரிலிருந்து தப்பி வெளியே வந்த நிலையில், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் போர் வரையில் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைமீட்டதாக கூறும் இலங்கை அரசாங்கம், போர் வலயத்திற்குள் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற மக்களை சுட்டு படுகொலை செய்த காட்சிகளை கண்டதாகவும், அவற்றுக்கு தான் கண்கட்ட சாட்சி எனவும் அவர் விபரித்துள்ளார்.
போர் வலயத்திற்குள்ளிருந்து வெளியே வந்த மக்களை சுமார் 5 நலன்புரி முகாம்களில் போட்டு அடைத்த இலங்கை அரசும் அதன் படைகளும், அந்த மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை கூட உரிய முறையில் போதியளவில் வழங்கவில்லை எனவும், அதனால் பல மக்கள் உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைகளுக்கும், அநீதிகளுக்கும் நீதியும் – பொறுப்புகூறலும் இடம்பெறவேண்டும் எனவும், இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் செய்த பாதக செயலை தமிழ் மக்களால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்றும் குகதாஸ் தனது முதலாவது உரையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்த உரையினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்ககுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, சபை முதல்வரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், உரையின் பிரதி மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைகக்ப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.