நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களுக்கு பிரதமர் மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள பிரதமர் மோதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் கூறுப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாகவும், இம்மாதிரியான சம்பவங்களுக்கு தனது கடுமையான கண்டனத்தை பிரதமர் தெரிவித்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இம்மாதிரியான சம்பவங்களை தடுக்க மாநிலங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு
தமிழ்நாடு மற்றும் திரிபுராவில் உள்ள பாஜகவினரிடம் இதுகுறித்து பேசி இருப்பதாகவும், பாஜகாவைச் சேர்ந்தவர்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெரியார் போன்ற தலைவர்களுக்கு எதிராக மரியாதை குறைவாக பேசும் செயலில் பாஜக ஈடுபடாது என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபவர்களை பா.ஜ.க வன்மையாக கண்டிருக்கிறது எனவும் முரளிதரராவ் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
நேற்று பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பஜாகாவைச் சேர்ந்த நபர் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரிபுரா கல்லூரி ஒன்றில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை பாஜகவினரால் ஜேசிபி கொண்டு அகற்றப்பட்டது. அச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
அதனை தொடர்ந்து “இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் அந்த பதவிற்கு அரசியல் தலைவர்களிடமிருந்தும், சமூக ஊடகங்களிலும் பெரும் கண்டனங்கள் எழுந்தன.
பதிவிட்ட சிறிது நேரத்தில் தனது பதிவை ராஜா நீக்கிவிட்டார். இன்று தனது அனுமதி இல்லாமல் தனது முகநூல் பக்கத்தில் அந்த கருத்து பதிவிடப்பட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.