சிறிலங்கா இராணுவத்தில் படைக்குறைப்புச் செய்யப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது. சில படைப்பிரிவுகள் வலிமை குறைவாக இருந்ததால், சிறிலங்கா இராணுவம் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இராணுவத்தின் ஆளணியைக் குறைக்கவோ, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தளங்களைக் கைவிடவோ எந்த நகர்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கை முன்னரும் எடுக்கப்பட்டிருக்கிறது எனவும், இத்தகைய முயற்சிகளின் நோக்கம், படைப்பிரிவுகளை சரியாக பேணுவதே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.