மன்னார் நகர நுழைவாயிலில் அகழப்பட்டுவரும் மனிதப் புதைகுழியி்ல இருந்து இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வந்த அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் 20 ஆவது தடவையாக ஆரம்பமாகியுள்ளன.
சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளின் போது அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் மற்றும் அழைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ, குறித்த அகழ்வு பணிகள் மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அகழ்வுப் பணிகளிகள் நிறைவரையும் வரை எவற்றையும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அகழ்வுகள் இடம் பெற்று வருவதாகவும், சில தடயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டுள்ளதாகவம், ஆனால் வேறு எந்த அபாயகரமான தடையப்பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதவான் முன்னிலையில் 20 ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருவதாகவும், முழுமையாகவும், துண்டு துண்டுகளாகவும் மனித எலும்புகள் மீட்கப்பட்டு வருகின்றன எனவும், பல்வேறு தரப்பினரின் உதவியுடன் அகழ்வுகள் இடம் பெற்று வருவதுடன், சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே அகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவும், குறித்த வளாகம் முழுமையாக அகழ்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.